Monday 28 April, 2008

புன்னகைக்கின்றாய் (இன்னும்)..

குப்பை கூடையில்
கிழித்துப் போட்ட
உன் புகைப்படம்
இன்னும்
சிரித்தபடி..

திருநங்கையாகிய நான்..

இன்று நான்
புதிதாய் பிறந்தேன்
கேலி பேச்சுக்களும்
குறு குறு பார்வைகளுக்கு
மத்தியில் எனக்கான
சுயத்தை தேடிய பயணத்தில்
என் அடையாளங்களை
தொலைத்துவிட்டு
வீட்டுக்குள்ளேயே
நாடோடியானேன்..
எனக்குள் நானே
முற்றுப்புள்ளிக்கான
தேடிய தேடல்
புதிய பெயரோடு
புதிய மனுசியாய்
நானும்..
ஆனாலும்
தோன்றவில்லை
என்
சுயத்தை அடைந்ததாய்
......

Friday 25 April, 2008

பாம்பும் புற்றுக்கு
பாலூற்றும்
தாயிற்கு
ஏன் தெரிவதில்லை
தெருவேர குழந்தையின்

வயிறு..

Tuesday 22 April, 2008

தூக்கம் வர மறுத்த
இரவுகளில்-சில
கவிதை வரிகள்
வந்து உரசும்..
விடிந்ததும் வார்த்தைகளை
தேடினால்
வெற்றிடமாய் அனைத்தும்....

நம்பிக்கையோடு..

நான்
நேசித்தது எல்லாம்
எங்கோ போனது
தனிமையில் நான்...

என்னைச் சுற்றியுள்ளதோ
இந்த பூமியும்
நம்பிக்கையும் மட்டுமே....

ஒற்றையாய்-ஒரு
வெளிச்சம்!
தொடமுடியாத
தூரத்தில்-ஆனாலும்
தொட்டுவிடுவேன் ஒருநாள்!

இப்போது நான்
உயிர் வசிப்பதன் அடையாளமாய்
என் மூச்சுக்காற்று
மட்டுமே என்னுடன்...

அனைத்தையும் தொலைத்துவிட்டு
இனந்தெரியாத
கனத்த இருட்டோடு
ஸ்நேகமாகின்றோம்
நானும்
என் நிழலும்
நம்பிக்கையோடு.....

காத்திருப்பு


காத்திருப்பது
சுகமானது-அதிலும்
உனக்கானதால் இன்னும்
அழகாகிறது!

Thursday 17 April, 2008

ஒருவருக்கொருவர்
பேசிக்கொள்ள
எவ்வளவோ இருக்க
அரைநொடி மெளனத்தில்
நிறைந்து விடுகிறது
பேசாமல் போன
அத்தனை வார்த்தைகளும்...

வாழ்க்கையின் ஓட்டத்தில்..

என் அத்துவ்வானக் காட்டில்
ஒற்றை வெளிச்சத்துடன்
என் நாட்கள் நகர்கின்றன
விடை தெரியா பல கேள்விகள்
ஆங்காரமாய் பல்லிழித்தபடி
கண்முன்னே..
வாழ்க்கையைப் பற்றிய
பல கனவுகளும் பல பயங்களும்
மாறி மாறி மெளனக்காட்சிகளாய்
வந்து செல்ல..
அங்கங்கே
சித்தாந்தமும் வேதாந்தவும்
தலைகாட்டியபடி..
மொத்தத்தில் பேரலையில்
சிக்குண்ட சிறகைப்போல்
நானும் -ஆனாலும்
அமைதியாக-ஒரு
சலனமில்லா நதியைப் போல
நகர்ந்து கொண்டே...

Monday 14 April, 2008

வாழ்க்கை ஒவ்வொருவருக்காகவும்

விடை தேடும் பயணங்களில்
அவ்வப்போது...
பல ஆச்சரியங்களையும்
பல புதையல்களையும்
கொடுத்துக்கொண்டு..
எப்போதும்
பல ரகசியங்களை
தன்னுள் ஒளித்து
ஒவ்வொருவருக்காகவும்
காத்திருகிறது.....
வாழ்க்கை
நாம் தான்
கண்டும் காணாமலும்
கடந்து கொண்டிருக்கின்றோம்....