Friday 27 February, 2009

நாளை என் மரங்கள் துளிர்க்கும் ..


அடர்வனங்களில் நுழைய வழியற்று
எட்டி பெருமூச்சு விட்ட சூரியக்கதிர்கள்
இன்று காவலிழந்த காடுகளின் வழியே
மெல்ல ஊடுருவ -அதன் வெம்மை
தாழாமல் கரைகின்றன இலைமேல்
படிந்திருந்த பனித்துளிகள்..

காத்திருந்த கழுகுகளும் வல்லூறும்
இரை மிகுதியால் ஆர்ப்பரித்தத்தில்
சத்தமாய் தான் இருக்கிறது என் காடு !
இரத்த வாடையுடன் பிசுபிசுக்கும்
மண்ணில் புதையும் கால்கள்
இடருகையில் எலும்புக் கூடுகள் வழியெங்கும் ..

ஓடுகிற நதிகூட தன்னியல்பு
மாறி நிறம் மாறுகிறது என் தாய்
தேசத்தை தழுவியதால் ..
மீண்டும் சிதறுகின்றன பனித்துளிகள்
கடந்து செல்கிறது
பிணந்தின்னிக் கழுகொன்று ....