Thursday 31 July, 2008

அழகான அந்த மாமரம் அடிக்கடி நினைவில் வரும்...


அடர்ந்து பரந்த
மரக்கிளைகளில்
கலர் சொல்ல தெரியா நிறத்தின்
இளங்குருத்தின் வாசத்தை
சுவாசத்தில் ஏற்றி காத்திருப்போம் நாம்
அண்ணாந்து பார்த்தபடி
முதல் மாம்பிஞ்சு துளிர்விடும்
அந்த ஒற்றை நாளிற்காய்...
பூ விடும் காலத்தில்
எம் மாமர ஊஞ்சலுக்கு
விடுமுறை கொடுக்கும் அப்பா
எம்மை தொட்டுப் பார்த்து
ஏங்க வைப்பார்
அந்நேரங்களில்...
பிஞ்சுகள் வர தொடங்க
சொல்லி வைத்தாற்போல்
எப்படித்தான்அந்தனை குருவிகளும் ,பறவைகளும்
வருகின்றன என எண்ணி வியந்ததுமுண்டு
பலவித குரல் எழுப்பி தம்
வருகையை ஆர்ப்பாட்டமாய்
முன்னறிவித்தபடி எம்மை போலவே
காத்திருக்கின்றனவோ..
கொஞ்சம் கொஞ்சமாய்
மாம்பிஞ்சுகள் உருமாறத் தொடங்க
மரத்திலேயே கடித்து வைத்து
நாமும் அணில் பிள்ளைகளாவோம்..
'கறுத்த கொழும்பான்'
நினைக்கவே இனிக்கின்றது...
இங்கும் விதம் விதமாய் மாம்பழங்கள்
புது பெயர்களில்,புது வடிவத்தில்...
இன்று வரை என்கண்களில் படவில்லை
எம் ஊர் 'கறுத்தக்கொழும்பான்'

எங்கள் மரத்தில் பழுக்க தொடங்க
ஊரே மணக்கும் வாசம்..
அரிசி பானையிலும், வைக்கோலுக்குள்ளும்
ஒளித்து வைத்து பழுக்க வைத்த நாட்கள்
நினைவுகளை வருடுகிறது
பல நேரங்களில் சந்தோச தொல்லையும் கூடத்தான்
மூன்று நேர சாப்பாடும் மாம்பழத்தோடு முடிவதும் உண்டு..
அந்தேரங்களில் இந்த மரத்தை
சபித்த நேரங்களும் உண்டு..
இன்றும் அம்மாவின் வார்த்தைகளிலும்
எம் வெளி சொல்லா நினைவுகளிலும் வாழ்கிறது
அந்த மாமரம்..
அதன் கீழ் வெடிய பதுக்கு குழிக்குள்
இருந்து மாங்காயோடு கழிந்த
அந்த இருண்ட நாட்களும் ...
நினைவில் நிற்பது
பழத்தின் வாசம் மட்டுமல்ல
நாம் தொலைத்த வாழ்க்கையும் தான்

இப்போதும் நீ
பூ பூப்பாய் பிஞ்சுகள் தொங்கும்
ஊரே மணக்கும்
அணில் கடி கடிக்க
நாங்களும் இல்லை....
அணில் ,குருவிகளும் அற்று....




Thursday 17 July, 2008

துயரங்களை துரத்திக்கொண்டு..


யாதுமற்ற பெருவெளியொன்றின்
தடுக்கி விழவைக்கும் விளிம்பொன்றில்
எங்கும் சூழ்ந்த கருமையோடு
தனித்து நிற்கின்றேன் யாருமற்று..
கால்களை உரசிச் செல்லும் காற்று
அவ்வப்போது கீழிழுத்தும் செல்லும்
காதடைத்து செய்தி சொல்லும் தென்றல்
சில பாடல் வரிகளை கவர்ந்து வரும்
எங்கோ ஒரு ஜீவனின் புல்லாங்குழல்
வழியும் சோக இசையோடு...

சுழன்றடிக்கும் சில புயல்களின் மத்தியில்
சிறு நாணலாய் திசைமாறி
நிமிர்ந்தெழுவேன் மீண்டும்..
அவ்வப்போது
அடர்ந்து பரந்து கிடக்கும் இருட்டோடு
ஐக்கியமாகி காணாமல் போவதுமுண்டு
மீண்டும் தட்டுத்தடுமாறி
வழி நுகர்ந்து கரைசேரும் போதெல்லாம்
எங்கோ ஒருகை காலிடறி விழவைத்து
ஆங்காரமாய் பல்லிளித்து விலகிச்செல்லும்...
மனக்கண்ணில் ஊசலாடும்
எனக்கான பாதையினை
தொட்டுவிட தொடரும் மனம்..
முட்டி மோதி வீழ்ந்தெழுந்து
விரையத்தான் நினைக்கின்றேன்
அவ்வழியில் நீயிருந்தால்
கை கொடுக்க வந்திடாதே-என்
என் நம்பிக்கையை முடமாக்க அது ஒன்றே போதும்
கொஞ்சம் விலகியே நின்றுவிடு
நானாய் எழுந்திடுவேன்
இன்று இல்லையேல் என்றேனும் .....