Tuesday 7 April, 2009

வந்த நாள் முதல் ..


சின்ன மின்மினிகள் ஏந்திச் செல்கிறன
ஒரு நாள் பொழுதொன்றின் வெளிச்சத்தை
ஊதாப் பூவின் வாசத்தோடு
கலைகிறது மாலை வானம்

மறந்து போன பாடலொன்றை
முணுமுணுக்கிறது காற்று
கரை மீதான காதலை எப்போதும் போலவே
உரத்துச் சொல்லும் அலைகள்

எல்லாம் அழகாய்த்தான் இருகின்றன ...
ஒரு ஞாயிற்றுக் கடற்கரை

காக்காய் துரத்தி
உப்பு மாங்காய் சாப்பிட்டு
சுடு சோளம் கடித்து
கலர் பலூன் குறி பார்க்கும்
குழந்தைகளை பார்க்கும் வரை..

இவர்களை போலவே வாழப் பிறக்கையில்
ஏன் நித்தம் செத்து மடியும் கொடுமை
ஈழத்தில் மட்டும் ?
அதே பத்துமாதம் கர்ப்பத்தில்
காத்திருந்து இப் பூமி வருகையில்
எமனுக்கு மட்டுமேன் நித்திய பிரசன்னம் ?

வெப்ப பெருமூச்சொன்று
வெளிக் கடந்து போகையில்
இது பொறாமையா இல்லை ஏக்கமா ?
துரத்துகிறது கேள்வியொன்று ...