Saturday 20 September, 2008

விடியலுக்காய் ..


சென்னை நகர நெருக்கடியில்
தீப்பெட்டி அடுக்குகளாய்
நிமிர்ந்து விட்ட
ஒரு ஜன்னல் ஓரத்தில்
ஈழவள் நானும்
தனிமையில்...

புளுதி படியும்
தெருவோர நியோன்
விளக்கு வெளிச்சத்திலும்
நாய்களின் சலசலப்பில்
தூக்கம் வர மறுத்த
இரவுகளோடு
என் நினைவுகளும்
எங்கேங்கோ
பயணிக்கும்...

ஞாபக முட்கள்
நெஞ்சை கிழிக்க
கடிவாளம் அற்ற
நினைவுகளோடு
ஜக்கியமாகின்றேன்....

கண்களில்
கசியும் நீரை
தென்றல் உலர்த்தி செல்ல
கடலோரக் காற்று
தேதி சொல்லும் நம்பிக்கையில்
உறக்கம் தழுவ
என்னையும் அறியாமல்
தூங்கிப் போகிறேன்
விடியலுக்காய் ..