Tuesday 27 January, 2009

தேவை கொஞ்சம் ஆக்ஸிஜன் ...


மரணத்தின் விளிம்பில் நின்று
கதறுகிறது ஓர் இனம்
கேட்கிறதா உம் காதுகளுக்கு?
காப்பார் எவருமற்று ...

எதைக் கேட்டோம் உம்மிடம்

வாழ்வுரிமை குற்றமா?
உங்களைப் போலவே நாமும்
ஜீவிக்கத்தான் பிறப்பெடுத்தோம் இங்கு ...
நித்தம் செத்துப் போகயல்ல ..

இழப்பதெல்லாம் இழந்தாயிற்று- இனி
எதுவுமில்லை உயிரைத் தவிர ..
நாளைய உலகிற்கு சொல்ல என்ன உண்டு?
பிணந்தின்னி கழுகுகள் நிறைந்திருக்கும்
வானத்தின் கீழிருந்து ஒப்பாரியை தவிர ..

சுகந்திரக் காற்றை சுவாசிக்க
ஆசையுற்ற எம் குரல்வளையை
நசுக்கும் கரங்கள் ஆயிரம் ..
நாளை தப்பிப் பிழைத்தால்
நன்றி சொல்வோம் உமக்கு ..
மறக்காமல் கொஞ்சம்
ஆக்ஸிஜன் அனுப்பி வைத்தால் ...

என்ன பிழை செய்தோம் ...
ஈழத்தில் தமிழராய் பிறந்தது தப்பா?
ஆம் என்று சொல்லிவிடாதீர்கள்
ஆயிரம் முறை பிறப்போம் நாம் !

எட்டிப் பாருங்கள் எம்மண்ணை
குருதி நனைந்து கடைசி உயிர்
துடித்துக் கிடப்பதை ...
என்ன செய்வாய் மனிதமே
இனியாவது ....?

Sunday 4 January, 2009

கனவுக் குதிரைகளின் வழித்தடத்தில் ..



காகித முகத்தை கத்தரித்து
புன்னகைப் பூவை ஏந்தி நிற்போம்
நகர்ந்து செல்லும் நதியிலிருந்து
நழுவி விட்ட கூழங்கல்லாய்
நனையட்டும் இதயம் ..

காய்ந்து போன கண்ணீர் துளிகள்
கொஞ்சம் கொஞ்சமாய் வைரமாகட்டும்
காற்றுக் கூட காத்திருந்து மூச்சாகட்டும்
அச்சுவாசத்தில் புது சுகந்தம் பரவட்டும்

பழமைகள் மங்கிப் போய் புதைந்தழிய
அச்சம்பலினுடே புதுமைகள் துளிரட்டும் ..
கோபங்களும் அவமானங்களும்
விழிகளில் தீப்பந்தமாய் மாற
கொஞ்சம் தீ பரவி சுயத்தை சூடக்கட்டும்

பெருமூச்செல்லாம்
புயலாகி வழி சமைக்கட்டும் ..
அந்த கானக வழியினுடே
கனவுக் குதிரைகள்
தறிகெட்டு ஓடட்டும்..