Monday 23 June, 2008

என் கனவுகள் காத்திருக்கின்றன...


பெண்மையின் அடையாளமாய்
யாரோ வைத்த குறியீடுகளைக் கொண்டு
என்னை அடக்கும் உங்களால்-என்
உணர்வுகளுக்கு வேலி போட்டதாய்
இறுமார்ந்திருக்கிறாய்
எனக்கான தேடல், ஆசைகள்
கனவுகள் அனைத்தையும்
மறைத்துக்கொண்டு நானும்..
நாகரீகத்தின் பாசாங்கின்
வேசத்தோடு ...
புரிந்தும் புரியாமலும்
என்முன்னே நிற்கிறது
எனக்கான என் வாழ்வு
முற்றும் சுழ்ந்த
வெறுமையின் தனிமையோடு..

முகமூடிகளோடு உலாவரும் உங்களிடம்
எவ்வாறு பிரிந்துணர்வேன்
நீங்கள் நீங்களாகவே இருக்கும்
தருணம் எதுவென்று.. என்
கண்களை நேரில் சந்தித்திருந்தால்-என்
கனவுகளை அறிந்திருப்பாய்-ஆனால்
பொட்டழிந்த என் நெற்றியல்லவா
உன் கண்ணுக்கு தெரிகிறது

பல வர்ணங்களை என்னை சுற்றி
நிறைத்துவிட்டு
வெண்மையை மட்டுமே
எனதாக்குகிறாய்-நிறமறியா
விழிகளாய் இருந்திருக்க கூடாதா
என் கண்கள்...வாச
மலர்த்தோட்டத்தின் மத்தியில் விட்டு
பூக்களுக்கு காவலாய் பணிக்கும் உன்னால்
வாசத்தை எனக்காய் கொஞ்சம் நிறுத்த சொல்ளேன்..
உங்கள் வார்த்தையின் கனத்தை விட
கொல்கிறது இது என்னை...

சில நேரங்களில் பாச வலையிலும்
சிக்குப்பட்டு விடுவேன் நான்
அறுத்தெறிய வழி தெரிந்தும்
என் இதயக்கதவுகளின் சாவிக் கொத்தை
மட்டும்தெரிந்தும் நானே தொலைத்துவிட்டு..
என் காய்ந்து போன கண்ணீர்ச் சுவடுகளை
மறைத்தபடி புன்னகைக்கின்றேன்
உங்களுக்ககாய்....
இருந்தும் -என்
கனவுகள் காத்திருக்கின்றன
நான்கு சுவரின் கனத்த இருட்டுக்குள்....

4 comments:

M.Rishan Shareef said...

//புரிந்தும் புரியாமலும்
என்முன்னே நிற்கிறது
எனக்கான என் வாழ்வு
முற்றும் சுழ்ந்த வெறுமையின் தனிமையோடு..//


//வாச
மலர்த்தோட்டத்தின் மத்தியில் விட்டு
பூக்களுக்கு காவலாய் பணிக்கும் உன்னால்
வாசத்தை எனக்காய் கொஞ்சம் நிறுத்த சொல்ளேன்..
உங்கள் வார்த்தையின் கனத்தை விட
கொல்கிறது இது என்னை...//

மிக அழகான வரிகள் சக்தி.
கவிதை மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கிறது.பாராட்டுக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள் ஸ்னேகிதி.

Sakthy said...

நன்றிகள் ரிஷான் உங்கள் கருத்துக்கு

ஜியா said...

வலிகள் பூண்ட கவிதை... அருமை

Sakthy said...

நன்றிகள் ஜி உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்..

Post a Comment