Wednesday 24 December, 2008

சாத்தான்களின் வருகையால் ..


மனிதம் நசுங்கும் பொழுதொன்றில்
வரும் என் அவலக்குரல் -உங்களுக்கு
ஒப்பாரிப் பாடாலாய் தோன்றலாம்
இதுதான் வாழ்க்கை எமக்கு
நித்தம் சப்பாத்துக் கால்களில் மிதிபட்டு
நசுங்குகிறது எம் குரல்வளை...

உயிர் உறையக் கதவடைத்து துயில்கையில்
நாய்களில் ஓலத்தில் எமனின் பிரசன்னம் !
மூச்சு விட மறந்து உயிர் பற்றி தவிக்கையில்
இடித்து உடைகிறது கதவு
தாழ்ப்பாள் தெறிக்க ...

இராணுவ மிருகங்கள் ஊர் புகுந்தபின்
அன்றாட வலிகளாய் போனது இதுவும் ..
ஆண்பிள்ளைகள் கைதாக்கி முற்றத்திலே
சோதனை என தொட்டுத் தடவுகையில்
செத்துப் போகிறாள் முதல் தடவை தமிழிச்சி ..

பெற்றவர்
, கட்டினவர் கண்முன்னே
அடித்து உதைத்திழுத்து செல்லுகையில்
யார் கதறலும் விழுவதில்லை
நடுநிசி ,உச்சிப் பொழுது எதுவும் கிடையாது
தமிழனின் உயிருக்கு ..
நித்தம் பலி வேண்டும்
புத்தனுக்கு படையலாய் ...

கைதாகிப் போனவர் நாளை
சுடப்பட்டு மூச்சடங்கி கிடப்பார்
வாய்பிளந்து ,குருதி காய்ந்து ஈ மொய்க்க ..
நாடான்ற தமிழன் நாதியற்று தெருவினிலே
சாத்தான்களின் வருகையால்
வீதியெங்கும் முகாரி ராகம்...

என் ஒப்பாரிப் பாடல் இன்னும்
சத்தமாய் ஒலிக்கும் உம் காதுகளில்
ஊர் மொத்தம் சுடுகாடாய்ப் போனதில்
செத்து விழும் பிணங்களுக்கு மத்தியில் நின்று
இன்னும் சத்தமாய் ..
இனி .....

2 comments:

Anonymous said...

nice one sakthi.. write more more more..
pls stop playing song. we want just poems.. only u r poems.

aathi anna

Sakthy said...

நன்றிகள் ஆதிபன் அண்ணா .. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ..

Post a Comment