Sunday 4 October, 2009

பனித்திரை விலகும் ...


காய்ந்து போன மரங்களில்
எட்டிப் பார்கின்றன துளிர்கள்
நகர்ந்து செல்லும் நதி வழியே
சிறு கூழாங்கற்கள் இடமாறிக் கொண்டு ..

தேங்கி நின்ற குட்டையெல்லாம்
தவளைக் குஞ்சுகளின் சத்தத்தில் அதிர்கின்றன
கூடறுந்த பறவைகள் கூட மெல்ல
தமதிருப்பை உறுதி செய்ய தொடங்கியாச்சு
எல்லாம் மாறிக் கொண்டு தான் இருக்கின்றன
ஓடும் காலத்தோடு சேர்ந்து ..

நீளும் உன் நேசக்கரங்களில்
நெரிபடுகின்றன மூச்சுக் குரல்
பயங்கர வாதத்திற்கு எதிரான போர்
என்னும் புரியாத பெயரோடு
நீயும் உளறிக் கொண்டு தான் இருக்கின்றாய்
செவிட்டுக் காதுகளில் ...

முள்வேலிக்குள் அடைபட்ட கூட்டம்
எலும்புகள் நெரிபடும் ஓசையில்
மூச்சு ஒடுங்கி மெல்ல மெல்ல
முதுகு சொறிய தொடங்க
களையெடுப்பு முடிந்த கையோடு
ஆட்சி நீடிப்பு வேலைகளில் ரகசிய
தீர்மானங்கள் பின் கொல்லையில் நடக்குது

எலும்புத் துண்டுக்கு அடிபடும்
ஓநாய்களும் வெறி நாய்களும் போடும்
கூப்பாட்டத்தால் சலசலப்பு
தூக்கி போட்ட கைகள் எப்போது வேண்டுமானாலும்
உம் முதுகெலும்பை ருசி பார்க்கலாம்
கவனமாயிருங்கள் !

எல்லாம் அமைதியாகத்தான் போகிறது
பகலவன் வானில் தோன்றும் வரைத்தான்
பனித்துளியின் ஆர்ப்பட்டமெல்லாம்
எல்லாம் மாறத்தான் போகின்றன
ஓடும் காலத்தோடு சேர்ந்து ..

3 comments:

M.Rishan Shareef said...

காத்திரமான சொற்களைக் கொண்டு நல்லதொரு கவிதையைக் கோர்த்திருக்கிறீர்கள். இடையிடையே //தொடங்கியாச்சு//, //நடக்குது// ஆகிய பேச்சுவழக்குச் சொற்களை, தூய தமிழில் எழுதியிருக்கலாமே ஸ்னேகிதி? அவை கவிதையை திசை திருப்புகிறது.

வால்பையன் said...

உங்களது ஃபேவரட் ப்ளாக்கில் எனக்கும் இடமளித்ததிற்கு நன்றி தோழி!

Sugirtha said...

கடைசி வரிகள் ஒரு நல்ல தொடக்கத்தை கணிப்பது போல மிக நன்றாக இருக்கிறது.

Post a Comment